சிவப்பு நிறத்திலுள்ள வெறுப்பு, மரணத்தில் முடிந்தது; தலவாக்கலையில் பரிதாபம்
– க. கிஷாந்தன் –
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிஸ்ரீபுர கிராமத்தில் சுமார் 40 அடி ஆழமான பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து, இளைஞரொருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது.
பிறவியில் மனநிலை பாதிக்கப்பட்ட அமில டீ சில்வா எனும் 31 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் என, பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிவப்பு நிறப் பூவை கண்டால் ஆத்திரம் கொண்டு, அதனைப் பிடிங்கி கசக்கி எறிவது இவரின் செயற்பாடாக இருந்து வந்தநிலையில், இன்று காலை சம்பவ இடத்தில் சிவப்பு நிறப் பூ ஒன்றை பிடுங்குவதற்காக, பாழடைந்த கிணற்றில் மேல் போடப்பட்டிருந்த சல்லடை கம்பியில் கால் வைக்க முற்பட்ட போது, தவறி விழுந்து இவ்வாறு உயிரிழந்தார் என்று, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தலவாக்கலை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், மேல் கொத்மலை மின்சார சபையினரின் உதவியுடன் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டனர். இதனையடுத்து, சடலம், பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக பரிசோதனைக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்தவரின் மரண விசாரணை நுவரெலியா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி முன் இடம்பெற்றது. இதன்போது, குறித்த இளைஞருக்கு மூச்சுச் திணறி திடீர் மரணம் ஏற்பட்டதாக, தலவாக்கலை பொலிஸ் சூழல் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி வீ. சுந்தர்ராஜ் தெரிவித்தார்.