அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், புதிய சத்திர சிகிச்சை கூடம்: டொக்டர் ஜவாஹிர் திறந்து வைத்தார்
– றிசாத் ஏ. காதர் –
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சைகளுக்காக புதிய தனியான சத்திர சிகிச்சைக்கூடம், இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது .
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர், இந்த சத்திர சிகிச்சை கூடத்தைத் திறந்து வைத்தார்.
சத்திர சிகிச்சைக்கூட பொறுப்பு தாதி ஏ.ஜி.எப். ஹினாயா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொது சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் பி.கே. ரவீந்திரன் , மகப்பேற்று பெண்ணோயியல் வைத்திய நிபுணர் டொக்டர் ஆர்.ஆர். விதானகே , மயக்க மருந்து நிபுணர் டொக்டர் கே. சுதேஷ்வரி , சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டொக்டர் இந்திராபாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, தர முகாமைத்துவ அலகு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே. நவ்பல் , பசுமை பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எம். ரெமன்ஸ், தாதிய பரிபாலகர் பி.ரி. நவ்பர் உட்பட, வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியேகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் எனப்பலரும் இதன்போது கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பொத்துவில் தொடக்கம் நிந்தவூர் வரையில் வசிக்கும் மக்கள் சேவையைப் பெற்று வருகின்றனர்.
அவசர சத்திர சிகிச்சைகளுக்காக புதிதாக தனியான சத்திர சிகிச்சைக்கூடம் திறக்கப் பட்டிருப்பதன் மூலம் இப் பிராந்திய மக்கள் விரைவானதும் திறனானதுமான சேவைகளைப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அண்மையில் பசுமை சுற்றாடலுக்கான ஜனாதிபதி விருதினை வெற்றி கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.