இலங்கை; குரோதப் பதிவுகளை அடையாளம் காணும் பொறிமுறை பேஸ்புக்கிடம் இல்லை: நியுயோர்க் டைம்ஸ் தெரிவிப்பு

🕔 April 23, 2018

லங்கை போன்ற வளர்முக நாடுகளிலுள்ள பேஸ்புக் பயனாளர்கள் இடுகின்ற குரோதப் பதிவுகளை நீக்குவதற்கு, பேஸ்புக் நிறுவனமானது போதுமானளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று, நியுயோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இலங்கையின் கண்டி, அம்பாறை போன்ற பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்களுக்கு பேஸ்புக் ஊடாக பரப்பப்பட்ட குரோதத் தகவல்கள் காரணமாக அமைந்தன.

ஒரு சம்பவம் இடம்பெற்றதன் பின்னர், அதற்கு இனச்சாயம் பூசப்பட்டு பேஸ்புக்கில் தகவல்கள் பரவ விடப்பட்டமையால், பல்வேறு வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதன்காரணமாகவே  கண்டி மாவட்டத்தில் இன வன்முறைகள் இடம்பெற்றபோது, இலங்கையில் சில தினங்களுக்கு பேஸ்புக் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

பேஸ்புக் நிறுவனமானது, குரோத பதிவுகளை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்ற போதும், அவை வளர்முக நாடுகளில் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அம்பாறையில் வன்முறைகள் இடம்பெற காரணமாக அமைந்த வீடியோவுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும், அது பேஸ்புக் நிறுவனத்தின் தணிக்கையுடன் முரண்படவில்லை என்று பதிலளிக்கப்பட்டதாக, மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு, இலங்கையில் குரோதத்தை ஏற்படுத்தக்கூடிய பதிவுகளை சரியாக அடையாளம் கண்டு நீக்குவதற்கான பொறிமுறை, பேஸ்புக் நிறுவனத்திடம் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கு பிரதான காரணம், பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகம்மொன்று இலங்கையில் இல்லை என்பதாக இருக்கலாம் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்