கிழக்கு முஸ்லிம்களை கேவலப்படுத்திய சபீக் ரஜாப்தீனுக்கு, முன்வரிசை கொடுத்தார் ஹக்கீம்

🕔 February 14, 2018

– அஹமட் –

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை மிகக் கேவலமாக அவமதித்துப் பேசிய, சபீக் ரஜாப்தீனை, மு.காங்கிரசின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் முன்வரிசையில் வைத்து, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் அழகு பார்த்துள்ளார்.

‘கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை முழங்காலிட வைப்பேன்’ என்றும், ‘அந்த மக்கள் தொழில் பிச்சை பெறுவதற்காக அரசியல்வாதியின் பின்னால் அலைபவர்கள்’ என்றும், தனது பேஸ்புக் பக்கத்தில், தேர்தல் பிரசாரக் காலத்தின் போது, சபீக் ரஜாப்தீன் எழுதியிருந்தார்.

இதனையடுத்து அவருக்கெதிராக, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தமது கண்டனங்களைத் தெரிவிக்கத் தொடங்கினர்.

இந்த நிலைமையினை சமாளிக்கும் பொருட்டு, சபீக் ரஜாப்தீன் – நீர் வழங்கல் அதிகார சபையில் வகித்த உத தலைவர் பதவியினையும், மு.காங்கிரசின் அமைப்பாளர் பதவியினையும் ராஜிநாமா செய்யுமாறு மு.கா. தலைவர் ஹக்கீம் கூறியதாகவும், அதற்கிணங்க அந்தப் பதவிகளை சபீக் ரஜாப்தீன் ராஜிநாமா செய்ததாகவும் மு.காங்கிரசின் ஊடகப் பிரிவு செய்திகளை வெளியிட்டிருந்தது.

இருந்தபோதும், முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில், மு.கா. தலைவர் அமர்ந்திருந்த முன் வரிசையில், சபீக் ரஜாப்தீனும் அமர்ந்திருக்கும் படங்களைக் காண முடிந்தது.

குறித்த படத்தில் சபீக் ரஜாப்தீனுக்குப் பின் வரிசையில், முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நீர் வழங்கல் அதிகார சபையின் தற்போதைய உப தலைவருமான எம்.எச்.எம். சல்மான் அமர்ந்திருப்பதையும் காண முடிகிறது.

அவ்வாறாயின், சபீக் ரஜாப்தீனுக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில்  – தற்போது என்ன அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது என்று, சமூக வலைத்தளங்களில் கிழக்கு மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கிழக்கு மாகாண மக்களை மிகக் கேவலமாகப் பேசிய சபீக் ரஜாப்தீனுக்கு, மு.கா. தலைவர் முன்னுரிமை வழங்குவன் பின்னணி என்ன?

அப்படியென்றால், சபீக் ரஜாப்தீனை மு.கா. அமைப்பாளர் பதவியிலிருந்து ஹக்கீம் ராஜிநாமா செய்ய வைத்ததாக வெளியான செய்திகள், கிழக்கு முஸ்லிம்களை ஏமாற்றும் முயற்சியா? எனவும், ஏராளமான கேள்விகள், சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுகின்றன.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், கிழக்கு முஸ்லிம்கள் விடயத்தில் மு.கா. தலைவரின் உண்மை முகம், இதுதான் போலவே தெரிகிறது.

தொடர்பான செய்தி: கிழக்கு மக்கள் சந்தர்ப்பவாதிகள்; உங்களை முழங்காலில் மண்டியிட வைப்போம்: மு.காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன், பேஸ்புக்கில் சர்ச்சை பதிவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்