இழந்த அதிகாரத்தைப் பெறுவதற்காக, உள்ளுர் மக்களை மரக் கட்சிக்காரர்கள் மோத விடுகின்றனர்; பலியாகக் கூடாது என்கிறார் அமைச்சர் றிசாட்

🕔 February 2, 2018

 

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் அகதி முஸ்லிம்களையும், உள்ளூர் மக்களையும் மோதவிட்டு, அதன்மூலம் வாக்குகளைச் சுவீகரித்து இழந்த செல்வாக்கையும், அரசியல் அதிகாரத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, சதி வேலைகளில் மரக்கட்சிக்காரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், இவ்விரண்டு சாராரும் இதற்குப் பலியாகிவிடக் கூடாது என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.  

புத்தளத்தில், ஹுசைனியாபுரம் (உளுக்காப்பள்ளம்), ஹிதாயத் நகர் (கரிக்கட்டை), நான்காம் கட்டை, தில்லையடி சதாமியாபுரம், கரம்பை, ரத்மல்யாய ஆகிய இடங்களில், மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறுகையில்;

“மக்கள் காங்கிரஸின் வளர்ச்சியையும், எழுச்சியையும் சகித்துக்கொள்ள முடியாத சக்திகள், தற்போது இழந்துபோன தமது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொள்ளும் வகையில், புதிய புதிய யுக்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர்.

வன்னி மாவட்டத்தில் இழந்த தமது பிரதிநிதித்துவத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, அதற்கு அடித்தளமிடும் வகையில் உள்ளூராட்சித் தேர்தலில், தமது செல்வாக்கை வெளிக்காட்ட வேண்டுமென்ற பிரயத்தனத்தில் ஈடுபட்டு வரும் மு.கா தலைமை, வன்னி மாவட்டத்தில் மன்னார், வவுனியா ஆகிய இடங்களுக்குச் சென்று பொய்யான வாக்குறுதிகளையும், இனிப்பான கதைகளையும் சொல்லி வருகின்றது. புத்தளத்திற்கும் வந்து இங்கு வாழும் மக்களை மகிழ்ச்சியூட்டும் வகையில், வேறுவிதமான கதைகளைக் கூறிவருகின்றது.

இதேவேளை, புத்தளத்தில் மு.கா வின் உள்ளூர்த்தலைமைகள் என மார்தட்டி வருவோர், இந்தப் பிரதேசத்தில் அந்நியோன்யமாகவும், இரண்டறக்கலந்தும் வாழ்கின்ற இரண்டு சாராரையும் மோதவிட்டு, அதன்மூலம் வாக்குகளைப் பெற்று, அரசியலில் குளிர்காயும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். புத்தளத்தில் இரண்டு தாசப்தங்களுக்கு மேலாக வாழும் வடக்கு முஸ்லிம்கள், நமது புத்தளத்து உறவுகளுடன் பின்னிப்பிணைந்து விட்டனர்.

திருமண உறவு, தொழில் முயற்சி, வியாபாரம் என்று பிணைந்துவிட்ட இந்த உறவுகள் வியாபித்து வரும் நிலையில், அதனை எப்படியாவது உடைத்து விடுவதன் மூலமே, சரிந்துபோன தமது வாக்கு வங்கியை ஈடு செய்யலாமென இவர்கள் முயற்சிக்கின்றனர். புத்தளத்தில் நாம் அகதியாக வந்து வாழ்ந்த, ஆரம்பகாலங்களை நாங்கள் நினைத்துப் பார்க்கின்றோம்.

புத்தளத்து முஸ்லிம்கள் அகதிகளை அரவணைத்தவர்கள். எம்மைப் போஷித்தார்கள். கொட்டில்களைக் கட்ட நிலம் தந்தார்கள். மாணவரின் கல்விக்குத் தமது பாடசாலைகளில் இடம் தந்தார்கள். தொழில் முயற்சிகளிலும், வியாபாரத்திலும் எமக்கு வழியமைத்துத் தந்தார்கள். தாராளமாக உதவினார்கள். அத்தனையையும் இழந்துபோன எங்களுக்கு உணவூட்டி, உரமூட்டிய இந்த மக்களை வடமாகாண முஸ்லிம்கள் என்றுமே மறக்கப்போவதுமில்லை. மறக்கவும் மாட்டார்கள். தமது வளங்கள் படிப்படியாக இழக்கப்படும் நிலையிலும், அவர்கள் மனங்கோணாதே நடந்து வந்தனர். அவர்களின் அன்பினாலும், உறவினாலும் இடம்பெயர்ந்த சமூகம் கட்டுண்டது. திருமண உறவுகள் ஏற்பட்டு இரண்டு சாராரும் பின்னிப்பிணைந்து வாழ்கின்றனர்.

‘அகதி’ என்ற சொல் புத்தளத்தில் மங்கிப்போகின்ற நிலையிலே, இப்போது மு.கா வின் உள்ளூர்த்தலைமைகள், இரண்டு சாராரையும் பிரித்தாள்வதன் மூலம், தமது அதிகாரங்களை நிலைநாட்ட முடியுமென எண்ணுகின்றனர்.

இதேவேளை, மு.கா வின் உள்ளூர்ப் பிரதிநிதிகளாகப் புத்தளம் மண்ணில் கோலோச்சிய அரசியல்வாதிகள், அகதிகளை அடிமைகளாக நடாத்தியதை நாங்கள் இன்னும் மறந்துவிடவில்லை.

வடக்கு முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்கொண்டு நோக்கி, தமது அதிகாரங்களின் மூலம் அடக்கி ஒடுக்கிய வரலாறுகள் எங்கள் கண்முன்னே வந்துபோகின்றது. இவர்களின் அக்கிரமங்களையும், அட்டகாசங்களையும் பொறுக்க முடியாததினாலேயே, இந்தச் சமூகம் சுதந்திரமாகத் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமென்ற நோக்கில் – நான் அரசியலுக்குள் தள்ளப்பட்டேன்.

இறைவனை முன்னிறுத்திச் செயற்பட்டதனால், அகதியாக இருந்த நான் அமைச்சராக முடிந்ததது. ஆனால், உள்ளூர் அதிகாரங்களை வைத்துக்கொண்டு எம்மை அடக்கி ஒடுக்கியோர், இன்றும் அதே அதிகாரங்களுக்காக போராடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே இறைவன் அவர்களை வைத்துள்ளான்.

மு.கா தலைவர் தேர்தல் காலங்களில் மட்டும் ‘அதை செய்து தருவோம், இதை செய்து தருவோம்’ என்று கூறி வருகின்றாரேயொழிய, இதுவரை எதைச் செய்தார் என்று அவரால் பட்டியலிட்டுக் காட்ட முடியுமா? என்று நாங்கள் கேட்கின்றோம்.

எனவே, மக்கள் பணிக்காக உங்களுடனே வாழும் எங்களின் கரத்தைப் பலப்படுத்துவதன் மூலமே, உங்களுக்கு விடிவு கிடைக்கும் என்பதை உணர்ந்து, மனச்சாட்சியுடன் எமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமாறு நாம் வேண்டுகின்றோம்” என்றார்.

இந்தக் கூட்டங்களில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி, புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, முன்னாள் நகரசபை உறுப்பினர் முஹ்சீன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா உட்பட ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்