இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, ஒருவர் காயம்
காலி மாவட்டத்தின் கொஸ்கொட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, கொஸ்கொட பகுதியிலுள்ள 03 இடங்களில் இந்த துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, முதலாவது சூட்டுச் சம்பவத்தில் 15 வயதுடைய மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இரண்டாவது சூட்டுச் சம்பவத்தில் 39 வயதுடைய ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்த நிலையில் 52 வயதுடைய நபர் ஒருவரும் அவருடைய 13 மற்றும் 30 வயதுடைய மகன்களும் மற்றொரு சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த, அடையாளம் தெரியாத 04 நபர்கள், இந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்காக ரி.56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.