அரசியலில் இல்லாது விட்டாலும், எனது சேவை தொடரும்: வாழ்வாதார உதவிகளை வழங்கிய பின்னர், றிப்கான் பதியுதீன் தெரிவிப்பு

🕔 September 7, 2017
“அரசியலில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு உதவும் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபடுவேன். அரசியல் என்பது நிரந்தரமற்றது.  அரசியலை மனதில் வைத்துக் கொண்டு நான் சேவை செய்வதில்லை. எமது சமூகம் என்ற அடிப்படையிலே சேவைகளை முன்னெடுத்து வருகிறேன்” என்று, வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.

மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பெறப்பட்ட கோழிக் குஞ்சுகளை, முசலி பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு வழங்கி வைத்த பின்னர் உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்;

“சென்ற தடவை எனது நிதியில் மன்னாரிலுள்ள  பலருக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டன. இம்முறை  முசலி பிரதேசத்தில் நிலவும் வறுமை மற்றும் தொழில் இன்றி கஷ்டப்படும் குடும்பங்களை கருத்திற்கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் இக் கோழிக்குஞ்சுகளை முசலி பிரதேசத்துக்கு வழங்குகின்றோம்” என்றார்.

முசலி பிரதேசத்தில் வாழும் மக்களின் வறுமை நிலையினை மாற்றி அமைக்கவும் சுயதொழில் செய்து தமது குடும்பங்களைப் பராமரித்துச் செல்லும் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்குடனும் இக் கோழிக்குஞ்சுகள் வழங்கிவைக்கப்பட்டன.

முசலி பிரதேச சபைக்குட்பட்ட 05 கிராமத்தில் வாழும் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு இக்கோழிக்குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன.

நாளொன்றுக்கு குறைந்தது ஒரு குடும்பம் 1500 ரூபாய்களை  வருமானம்  பெறக்கூடிய சந்தர்ப்பம் இதனூடாக கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்