கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானம்

🕔 May 17, 2017

– எஸ்.  அஷ்ரப்கான் –

ல்முனைக் கல்வி வலயத்திலுள்ள ஆசியர்களுக்கு, வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் எனும் பெயரில்  அண்மையில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட  இடமாற்றங்கள் அநீதியும் முறைகேடுமானதாகும் என்பதனை சுட்டிக்காட்டி, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு இலங்கை மகா ஆசிரியர் சங்கம் தீர்மானித்திருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் ஆசிரியர் ஏ.எம். அஹுவர் தெரிவித்தார்.

இது விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அண்மையில் ஆசிரியர் இடமாற்றம் ஒன்றினை மேற்கொண்டது. அதில் கல்முனை கல்வி வலயத்தில் கடமையாற்றிய ஆசிரியர்கள் வெளி வலயத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளனர். இந்த ஆசிரியர் இடமாற்றம் வருடாந்த இடமாற்றம் எனக் கூறப்படுகிறது.

ஆனால் வருடாந்த இடமாற்றம் நடைபெறுவதற்கான காலம் இதுவல்ல. இதுவொரு அநீதியானதும் முறைகேடானதுமான இடமாற்றம் என்பதே எமது முடிவாகும். இது தொடர்பில் நாம்  மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.

ஆசிரியர் நலன் பற்றி எந்த அக்கறையையும்  எடுக்காமல், அதே நேரம் மாணவர்களின் நலன்களை சீர்குலைப்பதாகவும் இந்த இடமாற்றம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலாம் ஆண்டு மாணவர்கள், ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் மற்றும் க.பொ.த சா.தா. மாணவர்கள் என்று பல்வேறு தர மாணவர்களையும் பாதிக்கும் வகையில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை வலய ஆசிரியர்களுக்கு நடந்திருக்கும் இந்த அநீதியான இடம் மாற்றம் குறித்து, போதிய சட்டஆலோசனையைப் பெற்றிருக்கும் நாம், எதிர்வரும் வாரம் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளன” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்