வெள்ளை வேனில் வந்தோர், மாணவனுக்கு ஊசி ஏற்றியதால் பரபரப்பு: கிண்ணியாவில் சம்பவம்

🕔 May 7, 2017
– றிசாத் ஏ காதர் –

வெ
ள்ளை வேனில் வந்த சிலர், கிண்ணியாவைச் சேர்ந்த – சதாத் முஹம்மட் றுஸ்கி என்கின்ற மாணவனுக்கு ஊசியொன்றினை ஏற்றி விட்டுச் சென்ற சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பந்தப்பட்ட சிறுவன், கிண்ணியா அல் – அதான் பாடசாலையில் தரம் 06ல் கல்வி கற்று வருகின்றார்.

குறித்த மாணவன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, வேனில் வந்த ஒரு குழுவினர் – அந்த மாணவனை அழைத்து, “வியாழக்கிழமை பாடசாலைக்கு வந்தாயா” என கேட்டிருக்கின்றனர். அதற்கு அந்த மாணவன், தான் பாடசாலைக்கு அன்றைய தினம் செல்லவில்லை எனக் கூறியிருக்கின்றார். அதனையடுத்து,  வேனில் இருந்தோர்; “நேற்று பாடசாலைக்கு வந்த மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது, பாடசாலைக்கு வராதோருக்கு இன்று போடுகின்றோம்” எனக் கூறி, சம்பந்தப்பட்ட மாணவனுக்கு ஊசியொன்றினை ஏற்றியுள்ளனர்.

குறித்த மாணவனின் வலது கை சிறு விரலின் உச்சப் பகுதியில் ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக, மாணவனின் உறவினர் ஒருவர் ‘புதிது’ செய்தித் தளத்துக்கு தெரிவித்தார்.
இதனையடுத்து, ஊசியேற்றப்பட்ட மாணவன் சக மாணவர்களிடம் விடயத்தை கூறியிருக்கின்றார். ஆனால், பாடசாலை மாணவர்களுக்கு அப்படி தடுப்பூசி எதுவும் ஏற்றப்படவில்லை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளார்கள். பின்னர், இவ்விடயம் ஆசிரியர்களின் கவனத்துக்கும் சென்றுள்ளது.

இதன் பின்னர் குறித்த மாணவனின் பெற்றோருக்கு விடயம் தெரியப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, அந்த மாணவன் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக பரிசோதனைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பாக கிண்ணியா மற்றம் திருகோணமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்