மாவட்ட செயலாளரை பணிக்கும் அதிகாரத்தை, ஞானசாரருக்கு வழங்கியவர் யார்; அரசாங்கத்திடம் கேளுங்கள் என்கிறார் நபுஹான்
மாவட்ட செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டளைகளைப் பிறப்பிக்கும் அளவுக்கு, ஞானசார தேரருக்கு அதிகாரத்தை வழங்கியவர் யார் என்று, நல்லாட்சியில் ஒட்டியுள்ள 21 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திடம் கூட்டாக கேள்வி எழுப்ப வேண்டும் என, பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்;
ஞானசார தேரருக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் ‘டபள் ப்ரோமோஷன்’ வழங்கப்பட்டுள்ளது. நல்லாட்சி பங்காளிகளில் ஒருவரான ஞானசார தேரர், அவருடைய வேலையை அரச உயர் மட்டத்தில் இருந்து தற்போதுசெயல்படுத்தி வருவது தெளிவாக தெரிகிறது.
மஹிந்த ராஜபச்ஷ காலத்தில் ஊர் ஊராக கத்தித் திரிந்தவர், இப்போது அரசாங்கத்தின் உயர் மட்டகூட்டங்களில் பிரதான பாத்திரம் ஏற்று கலந்துகொள்கிறார். அதிகாரிகளை மிரட்டுகிறார். கட்டளையிடுகிறா
மஹிந்த ஆட்சியில் இல்லாத அளவுக்கு ஞானசார தேரருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவரின் கோரிக்கைகளும் தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகிறது. வில்பத்து விவகாரத்தில் இருந்து – இறக்காமம் மாணிக்கமடு விடயம் வரையில், அவர் தலையிடும் அளவுக்கும் விடயம் கைமீறி போய்உள்ளது.
குடிவரவு திணைக்களத்துக்கு சென்று அவர் வழங்கிய அறிவுரைகளுக்கு அமைய, தற்போதுவெளிநாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்களின் வீசா கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.
இனிமேலும் நாம் பொறுமை காக்க கூடாது,பொலிஸ் உயரதிகாரிகள் முன்னிலையில் நீதிமன்ற உத்தரவை கிழித்து எரியுந்துவிட்டு தைரியமாக உலவும் அளவுக்கு, அவருக்கு இந்த நாட்டில்அதிகாரங்களை வழங்கியது யார் என அரசாங்கத்தில் ஒட்டியுள்ள 21 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்கத்திடம் கூட்டாக கேள்வி எழுப்ப வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இறக்காமம் மாணிக்கமடுவிலுள்ள முஸ்லிம்களின் காணிகளில் பௌத்த விகாரை அமைக்க முயற்சிப்பது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையினையடுத்து, நேற்று செவ்வாய்கிழமை ஞானசார தேரர் அங்கு விஜயம் செய்திருந்தார்.
இதேவேளை, அம்பாறை மாவட்ட செயலாளருடன் சந்திப்பொன்றினை நடத்திய ஞானசார தேரர், மாணிக்கமடு விவகாரம் தொடர்பில், மாவட்ட செயலாளருக்கு சில உத்தரவுகளை வழங்கினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.