அர்ஜுன மகேந்திரன் மீது குற்றச்சாட்டு: 66 மில்லியன் ரூபாவினை, சொந்த நோக்கத்துக்கு பயன்படுத்தினார்

🕔 February 5, 2017

Arjun Mahendran - 013த்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது பதவிக் காலத்தில் தன்னுடைய சொந்த நோக்கங்களுக்காக 66 மில்லியன் ரூபாவினை செலவிட்டுள்ளார் என்று, ஊழலுக்கெதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

21 மாதங்களில் 163 சந்தர்ப்பங்களிலேயே இந்த நிதியினை இவர் செலவிட்டுள்ளார் எனவும் வசந்த சமரசிங்க கூறியுள்ளார்.

அர்ஜூன மகேந்திரன் பதவி வகித்த காலத்தில் அவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள், அவருடைய கடனட்டைக்கான பணம் செலுத்துதல் மற்றும் ஹோட்டல் செலவுகளுக்கு பணம் வழங்குதல் உள்ளிட்ட தேவைகளுக்காக இவர் இவ்வாறு மத்திய வங்கியின் நிதியினைப் பயன்படுத்தியுள்ளார் என்று வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய வங்கியின் உள்ளக கணக்காய்வு அறிக்கையிலிருந்து மேற்படி தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒருமுறை – தான் அணிந்து கொள்வதற்கான கோட் ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக, அர்ஜுன மகேந்திரன் 02 லட்சம் ரூபாவினை செலவிட்டுள்ளார் என்றும் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தடவை, அர்ஜூன மகேந்திரன் ஒரே நாளில் இரண்டு தனித்தனி ஹோட்டல்களில் தங்கியிருந்ததாக ஆவணங்கள் தயாரித்து, அவற்றுக்கான பணத்தினையும் பெற்றுள்ளதாகவும் கணக்காய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக நிதி மோசடி விசாரணை பிரிவில், முறைப்பாடு செய்துள்ளதாகவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அர்ஜுன மகேந்திரன் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்