வெளியே வந்தது தாருஸ்ஸலாம் மர்மம், அடுத்த முடிச்சு தலைவரின் படுகொலை: அம்பலப்படுத்துவாரா பசீர் சேகுதாவூத்

🕔 January 15, 2017

Asmi Gaffor - 01அஸ்மி ஏ கபூர் (முன்னாள் உறுப்பினர் – அக்கரைப்பற்று மாநகரசபை)

தாருஸ்ஸலாம் என்கின்ற மு.காங்கிரன் தலைமையகம் பல தரப்பட்ட கொடுக்கல் வாங்கலுக்குட்பட்டு, கிழக்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்து கொடுத்ததன் மூலம், அதனை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எவ்வாறு பெற்றுக் கொண்டுள்ளார் என்பதனை விளக்கும் நூல், அண்மையில் தாருஸ்ஸலாம் மீட்புப் குழுவினரால் மக்கள் பார்வைக்கு விடப்பட்டது.

அது எவ்வாறான தாக்கத்தை கட்சிக்குள்ளும்,கட்சிக்கு வெளியேயும் ஏற்படுத்தப் போகிறது என்பதை, மிக அவதானமாக எதிர்காலத்தில் நோக்க முடியும்.

கட்சித் தவிசாளராக ஏ.எல்.எம். அதாஉல்லா பிளவு பட்டு சென்ற போது, கிழக்கிலுள்ள ஐ.தே.கட்சி பிரமுகர்களை முஸ்லிம் காங்கிரஸ் உள்வாங்கிய போது, மக்கள் அலட்டிக் கொள்ள தகுமான காரணங்கள் இருந்தும், கட்சித் தலைவரை மக்கள் ஒரு தடவை நம்பினார்கள்.

ஆனால் தமது கட்சி சின்னத்தை பறித்து, கட்சியை நடு வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியவர்களையும், மறைந்த தலைவரை மிக மோசமாக விமர்சித்தவர்களையும் பக்க துணைக்கு வைத்து கொண்டு, தலைவர் வீணை வாசிப்பதையும் கட்சிப் போராளிகளை துரத்த நினைப்பதையும் எவனும் ஏற்றுக் கொள்வான் என நினைக்க முடியாது.

அடுத்து வெளிப்படுத்த வேண்டி முடிச்சு, தலைவரின் படுகொலை பற்றியதாகும். இந்தப் படுகொலை தொடர்பில் இவ்வளவு காலமும் – ஆளுந்தரப்பில் இருந்த மு.கா.தலைவர் ஒரு வார்த்தை கூட பேச முடியாத அல்லது பேசாத மர்மம் என்ன?

நீதி அமைச்சராக இருந்தபோது கூட, இதன் பணிகளை முன்னெடுக்கவில்லை.

அஷ்ரப்பின் பெயரை சொல்லி, அவர் உருவப்படத்தை காட்சிப் பொருளாக மாற்றி வியாபாரம் செய்கின்ற ஏமாற்று அரசியல் தந்திரிகளால், ஏன் அஷ்ரப் எனும் மாமனிதர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பேச இயலவில்லை

அண்மையில் மு.காங்கிரஸின் வெளியீட்டு பணிப்பாளராகவும் தலைவரின் விசவாசத்துக்குரிய வலது கரமாகவும் இருந்த எழுத்தாளர் எம்.பெளசர்; தலைவரின் மரணம் குறித்து எழுதியிருந்தார். அதில்; மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் படுகொலை மரணம் , 43 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க சி.ஐ.ஏ.யால் கொலை செய்யப்பட்ட சிலியின் மக்கள் தலைவன் சில்வடோர் அலேண்டேயின் அரசியல் படுகொலையுடன் ஒப்பிடக் கூடியது என்று பதிவு செய்திருந்தார். மேலும், ‘அஷ்ரபின் மரணம் வெறுமனே ஒரு உள்ளூர் திட்டமிடல் அல்ல. அதன் பின்னால் சர்வதேச அரசியலின் நிகழ்ச்சி நிரல் இருந்திருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன்.
அதற்கு ஏவப்பட்ட ஒரு கருவியே விடுதலைப் புலிகள்’ எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடந்த அரசியல் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலில், ஒரு முக்கிய காய் நகர்த்தலே மர்ஹும் அஷ்ரப் மீது நடாத்தப்பட்ட படுகொலைத் தாக்குதலாகும்.

ஒரு நாட்டில் ஒரு விடயத்தினை செய்வதற்கு முன், தமது நிகழ்ச்சி நிரலை தங்கு தடையின்றி நிகழ்த்த வாய்ப்பான சூழலை , சர்வதேச ஆதிக்க அரசுகள் எப்படித் திட்டமிடும், அதற்கு என்ன என்ன செய்யும் என்பதை , சமகால சர்வதேச அரசியல் தொடர்பில் அறிவுள்ளவர்கள் ஓரளவேணும் புரிந்து கொள்ளலாம்.

முஸ்லிம்களின் அரசியல் தலைவர் அஷ்ரபை அழிக்க, பிரபாகரனையும், விடுதலைப் புலி இயக்கத்தினையும் பயன்படுத்திய சர்வதேசம், பின்னர் – விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிக்க , மகிந்த ராஜபச்சவை பயன்படுத்தியது. பின்னர் தனது நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைக்காத மகிந்தவை அதிகாரத்தில் இருந்து இறக்க மைத்திரியையும் , ஐக்கிய தேசியக்கட்சியையும் அதன் தலைவர் ரணிலையும் பயன்படுத்தியது.

எனவே தலைவரின் மர்ம படுகொலையின் முடிச்சுக்களை அவிழ்த்து, அவரின் கப்றை காணும் போதல்லாம் ‘எம் தலைவனை கொன்று அந்த உடலின் பாகங்களின் மேல் ஆட்சி அதிகாரங்களை செலுத்துகின்ற கொடியவர்கள் அழிய வேண்டுமென்ற’ கடை நிலை போராளியின் தூய எண்ணத்தையாவது மு.கா. தவிசாளர் பசீர் சேகுதாவூத் தீர்த்து வைக்க வேண்டும்.

ஒவ்வொரு கட்டம் கட்டமாக எந்த தலைவர்களை ஆதரிக்க நாம் கடமைப்பட்டோம்  என்பதையும் பசீர் தெளிவுபடுத்த வேண்டும்.

தாருஸ்ஸலாத்தை மீட்க புறப்படும் போராளிகள், ஒரு முறை ஜாவத்தை பள்ளிவாசல் மையவாடியிலுள்ள, தலைவரின் கப்றடிக்கும் செல்லுங்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்