அஷ்ரஃபின் புதிய முகம் றாஸிக்

🕔 November 27, 2016

basheer-012111– பஷீர் சேகு­தாவூத் (தவிசாளர் – மு.காங்கிரஸ்) –

ண்பதுகளில் முஸ்லிம்கள் வடகிழக்கில் வன்முறைகளால் அடக்கி ஒடுக்கப்பட்டு, அவர்களின் நாளாந்த வாழ்வுகூட முடக்கப்பட்டு ஆளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஒரு சிறு குழுவின் தலைவராய் திகழ்ந்த அஷ்ரஃப் – தனது சமூகம் கோழைகளின் கூடாரமாக இருக்க அனுமதிக்க முடியாது என எண்ணி, குரல் கொடுக்க தொடங்கியதன் விளைவுதான் – இன்று இலங்கையில் இருக்கும் தலை நிமிர்ந்த முஸ்லிம் சமூகமாகும்.

சமூகத்துக்கு தைரியமூட்டுவதற்காகத்தான் அவர் மௌத்தாக தயாரானார். ஈமானோடும் வெறுங்கையுடனும், குரலில்ஆயுதம் ஏந்தி போராடக் களமிறங்கினார்.

கைகளில் ஆயுதமும், மனங்களில் வன்மமும் ஏந்தியோரால் முஸ்லிம்கள் வீதியோரங்களிலும், வயல் வரப்புகளிலும், வீட்டு வளவுகளுக்குள்ளும் சுட்டுக்கொல்லப்பட்டு கிடந்த காலமது.

தனது உயிருக்கு நிச்சயம் ஆபத்து என்று தெளிவாக உணர்ந்திருந்த போதும்;
1) என்னைப் படைத்த றப்புவை தவிர எவருக்கும் அஞ்சேன், முஸ்லிம்களும் அஞ்சக்கூடாது
2) எந்தப் பைத்தியகாரன் வந்து கடையை மூடுமாறு துண்டுப் பிரசுரம் வினியோகித்தாலும், கடைகளை மூடுவதற்கு நாம் என்ன கோழைகளா?
3) மௌத்து மனிதருக்கு ஒரு முறைதான் வரும், பீஸபீல் மரணம் சொர்க்கத்தை பரிசளிக்கும். மக்களே பயம் வேண்டாம் .
4) பிரபாகரனின் கழுத்தைக் கடித்தவனாக மரணிக்க விரும்புகிறேன்.

போன்ற கருத்துக்களை மேடைகளிலும், நாடாளுமன்றத்திலும் அஷ்ரஃப் முழங்கினார். சமூகம் தைரியத்தை நெஞ்சத்துள் நிறைத்துக் கொண்டது.

90 களில் மேலும் உக்கிரமாக முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது, அஷ்ரஃப் மேலும் திடமானார், தைரியத்தை ஊட்டினார்.

தற்போது ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஒரு வன்முறைக்கு முகம் கொடுக்க நேருமோ என நினைக்கும் அளவுக்கு – இலங்கையின் அரசியல், சமூகக் களங்கள் இன, மத, வெறுப்பேற்றலுக்குள் வீழ்ந்து களங்கப்பட்டுக் கிடக்கிறது. கலங்கிய குட்டையில் பல சக்திகள் மீன் பிடிக்க வலைகளோடு அலைகின்றன.

இந்த நெருக்கடியான சூழலில், சமூகத்தை தைரியமூட்டும் வேலையை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் றாஸிக் செய்வது போல், ஒரு தோற்றப்பாடு தெரிகிறது.

அவர் கைது செய்யப்பட்டுள்ளமை முஸ்லிம் இளைஞர்களுக்குள் – அவரை ஒரு கதாநாயகனாகவும் ஆக்கிவிட்டுள்ளது. விடுதலை செய்யப்படும் போது, சிறைமீண்ட செல்வராகவும், சமூகத்துக்காக தன்னை தத்தம் கொடுக்கவும் தயாரான தியாகியாகவும் – ஒரு புடம் போடப்பட்டவராகவே வெளிவருவார்.

முஸ்லிம் அரசியலில் இளமையானதும், தைரியமானதுமான கருத்துக்கள் தேவைப்படுகிற காலம் இது. மீதமிருக்கும் முதிர்ந்த முஸ்லிம் அரசியலுக்கு இப்புதிய சூழல் காயடிக்கவும் கூடும்.

மார்க்க ரீதியாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்துடன் உடன்படும் முஸ்லிம்கள் இலங்கையில் குறைவாகவே உள்ளனர். ஆனால் அவர்களின் அரசியலில் உடன்படும் முஸ்லிம் இளைஞர்கள் அதிகரித்து வருகிறார்கள். விசேடமாக கிழக்கில் மீண்டும் 80களில் நிலவிய ஒரு தைரிய சஞ்சாரம் ஊடறுப்பது தெரிகிறது. முன்னைய காலங்களில் இளம் பிள்ளைகள் வாப்பா, உம்மாவின் மனோநிலைக்கு ஏற்ப தீர்மானம் எடுக்கும் வழமை இருந்தது. இப்போதெல்லாம் தம் இளம் பிள்ளைகளின் மனோநலைக்கு ஒவ்வும் தீர்மானங்களையே பெற்றோர் எடுக்க காண்கிறோம்.

எண்பதுகளில் அஷ்ரஃபின் அரசியல் முன்னெடுப்புகளை, இன்று அரங்கில் காணக்கிடைக்கிறது. அதனை கருத்தியல் ரீதியாக தற்போது முன்னெடுப்பவர் அப்துல் றாஸிக் ஆவார்.

இந்த வெப்பக் காலநிலை – இன்று முஸ்லிம்களுக்குள் இருக்கும் “நமக்கு மாற்றுத் தலைமை இல்லை” என்கிற மூட நம்பிக்கையை ஆவியாக்கவும் வாய்ப்புண்டு.

நன்றி: பஷீர் சேகு­தாவூத் பேஸ்புக் பக்கம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்