முச்சக்கர வண்டிகளுக்கு ‘டயர்’கள்; ஜெமீலின் பத்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பகிர்ந்தளிப்பு
– எம்.வை. அமீர் –
கிழக்குமாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் குழுத்தலைவருமான ஏ.எம். ஜெமீலின் அபிவிருத்தி நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட, முச்சக்கர வண்டிகளுக்கான ‘டயர்’களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு – சாய்ந்தமருது ‘கொம்டெக்’ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் திட்டத்தின்கீழ், சுமார் பத்து லட்சம் ரூபாய் நிதியில் கொள்வனவ செய்யப்பட்ட மேற்படி ‘டயர்’கள், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவு எல்லைக்குள் வசிக்கும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு ஒரு சோடி வீதம் வழங்கப்பட்டன.
மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீலுடைய பிரத்தியோக செயலாளர் சீ.எம்.ஏ. முனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கான ‘டயர்’களை வழங்கிவைத்தனர்.
இந்த நிதி ஒதுக்கீடு மூலம், சாய்ந்தமருதைச் சேர்ந்த 194 முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு ‘டயர்’கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில், மாகாணசபை உறுப்பினர் ஜெமீல் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதாக அறிக்கப்பட்டிருந்தபோதிலும், தவிர்க்கமுடியாத காரணத்தினால் – அவர் வருகை தரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.