அனுராதபுரம் சிறைச்சாலைக்கு பிரதிமைச்சர் விஜயகலா விஜயம், அரசியல் கைதிகளையும் சந்தித்தார்
🕔 June 21, 2015
– பாறுக் ஷிஹான் –
அரசியல் கைதிகளாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, நேற்று சனிக்கிழமை, மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் சந்தித்து உரையாடினார்.
சிறைச்சாலைக்கு சென்று, அரசியல் கைதிகளைச் சந்தித்து விட்டுத் திரும்பிய பிரதியமைச்சர் விஜயகலா, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்;
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில், அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாகக் கூறினார். மேலும், அடுத்த பாராளுமன்ற அமர்வில் இவ்விடயம் குறித்து, பிரதமர் உள்ளிட்டோரின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறையிலுள்ள அரசியல் கைதிகளில் பலர், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையிலும், குற்றத்திற்கான சாட்சியங்கள் நிரூபிக்கப்படாத நிலையிலும் உள்ளனர் எனவும் பிரதியமைச்சர் சுட்டிக் காட்டினார். இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, அரசியல் கைதிகளின் விடுதலைக்கு – போதிய நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்ட போதிலும், இதுவரை அரசு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
அத்துடன், தமது விடுதலை தொடர்பில் – அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்ற போதிலும், பிரதமர் எவ்வித முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை என, கைதிகள் குற்றம் சாட்டுவதாகவும் பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் இதன்போது விபரித்தார்.