
– அஷ்ரப் ஏ சமத் –
நோன்பு மாதத்தை முன்னிட்டு சஊதி அரேபியா அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக 50 டொன் எடையுள்ள பேரீச்சம் பழங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (16) கொழும்பிலுள்ள சஊதி அரேபிய தூதரகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு, சஊதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் காலித் மஹ்மூத் அல் கஹ்தானி தலைமையில் இடம்பெற்றது.
சஊதி அரேபிய மன்னர் சல்மான்-இன் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) வழங்கிய மேற்படி பேரீச்சம்பழ நன்கொடையை, மத விவகாரங்கள் மற்றும் கலாச்சார பிரதி அமைச்சர் முனீர் முலஃபர் – சஊதி தூதுவரிடமிருந்து பெற்றுக்கொண்டார்,
இதன்போது, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, வெளிநாட்டு பிரதியமைச்சர் அருன் ஹேமச்சந்திர ஆகியோரும், அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள் .
இந் நிகழ்வில் சஊதி நிவாரண மையத்தின் (KSrelief) பிரதிநிதி, முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகார திணைக்களத்தின் பணிப்பாளர்’, அமைச்சின் உயர் அதிகாரிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் மதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் முனீர் முளாஃபர், இந்த நன்கொடை மூலம் – சஊதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்று கூறினார்.

ரமழான் காலத்தில், இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகம், சஊதி அரேபியாவுக்கு நன்றி கூறக் கடமை பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்



