தலைப்புச் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு இனி முப்படையினர் இல்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முப்படையினரின் பாதுகாப்பை எதிர்வரும் வாரத்தில் விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பொலிஸார் வழங்கும் பாதுகாப்பு இவர்களுக்கு தொடர்ந்து கிடைக்கும்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய பொது பாதுகாப்பு அமைச்சர்; “06 மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மதிப்பீட்டின் படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்” என்றார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிக்காக வருடாந்தம் 1,448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல், முன்னாள் ஜனாதிபதிகளுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் அமைச்சர் வெளியிட்டார்.

“இன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு 60 பொலிஸ் அதிகாரிகளும் 228 முப்படை அதிகாரிகளும் பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 04 இராணுவ அதிகாரிகளும் 60 பொலிஸ் அதிகாரிகளும் மெய்ப்பாதுகாவலர்களாக உள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பாதுகாப்பிற்காக 188 முப்படையினரும் 22 பொலிஸாரும் வழங்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 57 ராணுவத்தினரும் 60 பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு 60 பொலிஸ் உத்தியோகத்தர்களும்,  ஹேமா பிரேமதாசவுக்கு 10 பொலிஸ் அதிகாரிகளும் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.