மாகாண ஆளுநர்கள் சட்டங்களை மீறிச் செயற்படுவதாக, பஃப்ரல் குற்றச்சாட்டு

🕔 July 10, 2024

மாகாண ஆளுனர்கள் சிலர், தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெஃப்ரல் குற்றம் சுமத்தியுள்ளது.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த அமைப்பு கோரியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு – நடைபெறாத நிலையில், அரசாங்கத்தின் சில அபிவிருத்தி திட்டங்களை மேற்பார்வை செய்யும் பொறுப்பு, உள்ளுர் அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்கப்படுவது ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி நடவடிக்கைகளை எதிர்க்கவில்லை என்ற போதிலும் தேர்தல் முறைகேடுகளை எதிர்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாண ஆளுநர்கள் – தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் சில நியமனங்களை வழங்கி வருவதாகவும் ரோஹன ஹெட்டியாரச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.

அரச மற்றும் உள்ளுராட்சி மன்ற சொத்துக்கள் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்படுவதனை அனுமதிக்கக் கூடாது என அவர் மேலும் கோரியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் உடன் தலையீடு செய்து – தடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்