கூகுள், யூ-டியூப் உள்ளிட்ட மூன்று தரப்புக்கு எதிராக, இலங்கை ராணுவத் தளபதி வழக்குத்தாக்கல்
இலங்கை ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, தனக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான வீடியோக்களை பகிர்ந்ததாக தனிநபர் ஒருவருக்கும், இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கும் எதிராக – கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், நேற்று செவ்வாய்க்கிழமை (07) – இந்த வழக்கை ராணுவத் தளபதி தாக்கல் செய்தார்.
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த துஷார சாலிய ரணவக்க என்பவர் வழக்கில் பெயரிடப்பட்டுள்ளதுடன், அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான கூகுள் மற்றும் அதன் ஒன்லைன் வீடியோ பகிர்வு தளமான யூ-டியூப் ஆகியவையும் வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.
தனது வழக்கைத் தாக்கல் செய்த ராணுவத் தளபதி, பிரதிவாதிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்புமாறும், அவதூறான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் மேலும் பரப்பப்படுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.