ஒரு வடை, ஒரு தேநீர் ஆகியவற்றுக்கு 800 ரூபாய் அறவிட்டவர் கைது
களுத்துறை உணவகமொன்றில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு ‘ஒரு வடையும் ஒரு தேநீரும்’ கொடுத்து விட்டு, அதிக தொகை அறவிட்டமைக்காக, இடைத்தரகர் ஒருவரை சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வெளிநாட்டுப் பிரஜை, உணவகத்துக்கு சென்றமை தொடக்கம் பணம் கொடுத்தமை வரையிலான அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
மேற்படி வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை – உணவகத்துக்கு அழைத்துச் சென்ற இடைத்தரகர், அவரிடமிருந்து ஒரு உழுந்து வடை மற்றும் ஒரு தேநீர் ஆகியவற்றுக்கு 800 ரூபாவை பெற்றிருந்தார்.
குறித்த பணத்தை செலுத்திய வெளிநாட்டுப் பிரஜை, கடைக்கு வெளியே வந்து – வீதியால் பயணித்த பெண் ஒருவரிடம் வடையின் விலையை விசாரித்தார். அதற்கு அந்தப் பெண்மணி 100, 150 ரூபாய் இருக்கும் என்று பதிலளித்தார்.
இதனைக் கவனித்த இடைத்தரகர், அந்த வெளிநாட்டுப் பிரஜையிடம் 200 ரூபாயை மீளக் கொடுக்கின்றார்.
இவை அனைத்தையும் குறித்த வெளிநாட்டுப் பிரஜை வீடியோவாக பதிவு செய்திருந்தார்.
இதேவேளை, உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக தனி வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.