வைத்தியர்கள் நாடு திரும்புகின்றனர்: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

🕔 March 13, 2024

நாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் தற்போது நாடு திரும்புவதால், இலங்கையின் சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறை எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) டொக்டர் ஜி. விஜேசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கையில்; விசேட வைத்தியர்கள் உட்பட பல வைத்தியர்கள் மற்றும் தாதிகள் நாட்டை விட்டு வெளியேறியதையடுத்து, இலங்கையில் அண்மையில் வைத்தியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

“கொரோனா தொற்றுநோய் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக சுகாதாரப் பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

இருந்தபோதிலும், விசேட வைத்தியர்கள் உட்பட பல வைத்தியர்கள் தற்போது இலங்கைக்கு திரும்புகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறும் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்த டொக்டர் விஜேசூரிய, அதற்குப் பதிலாக பல வைத்தியர்கள் தமது விடுமுறைகளை ரத்து செய்துவிட்டு இலங்கைக்குத் திரும்பி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு திரும்பிய வைத்தியர்கள் மூலம், சுகாதார அமைச்சினால் தேவையான வைத்தியசாலைகளுக்கு விசேட வைத்தியர்களை நியமிக்க முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சுகாதாரப் பணியாளர்கள் நாடு திரும்புவதன் மூலம் இலங்கையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும் எனவும் டொக்டர் விஜேசூரிய நம்பிக்கை தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்