“நான் எதிர்பார்க்கவில்லை”: நாட்டை பொறுப்பேற்ற போது, தனக்கிருந்த மனநிலை குறித்து ஜனாதிபதி விபரிப்பு

🕔 March 11, 2024

க்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லையெனவும், சிலரின் கட்டுப்பாட்டில் அந்தக் கட்சி இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டைக் கடன் சுமையில் இருந்து காப்பாற்றி, எதிர்காலச் சந்ததிக்காக பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு – அனைத்து ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.

குளியாபிட்டிய மாநகர சபை மைதானத்தில் நேற்று (10) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டுக்காக ஒன்றுபட்டு உழைக்க விரும்பும் மக்களின் சந்திப்பான இந்தப் பொதுக் கூட்டம் ‘நிதர்சனம்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, இந்த முதலாவது பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பங்கேற்ற முதலாவது பொதுக்கூட்டம் இதுவாகும்.

இங்கு உரையாற்றிய பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மக்கள் மத்தியில் சென்று அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

ஜனாதிபதியாக பதவியேற்றது முதல், கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, குறுகிய அரசியல் நலன்களை நிறைவேற்றாமல் நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இக்கட்டான காலத்திலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் புரட்சியை ஏற்படுத்த அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

எப்பொழுதும் உண்மையைக் கூறி முன்னோக்கிச் செல்ல ஐக்கிய தேசியக் கட்சியினால் முடியுமாக இருந்தது தொடர்பில் தாம் பெருமை கொள்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டம் – ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிடுகையில்;
”இந்த மைதானத்தில் இன்று ஏராளமானோர் குவிந்துள்ளனர். கடினமான காலங்களில் நீங்கள் அனைவரும் எனக்கு வழங்கிய ஆதரவுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். அந்த இக்கட்டான காலகட்டம் முடிவடையும் போது முன்னோக்கிச் செல்வதற்கு தேசிய கருத்தொருமைப்பாடொன்றை ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது.

எங்கள் முன்னிலையில் இன்னும் சில சவால்கள் இருக்கின்றன. குறுகிய அரசியல் வேறுபாடுகள் இன்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறிச் செல்ல வேண்டும்.

நான் அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற போது, ​​நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வர முடியும் என நான் எதிர்பார்க்கவில்லை. இன்று நாம் வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளோம். இதற்கு குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும் என்று பலர் நினைத்தார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இங்கு வந்துள்ளனர். அவர்களுடனும் உத்தியோகபூர்வ கடன் வழங்கிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி மே அல்லது ஜூன் மாதத்தில் முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட எதிர்பாரக்கிறோம். அதன் பிறகு, வங்குரோத்தற்ற நாடாக, சலுகைகளைப் பெற முடியும்.

இந்தப் பயணத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது. மேலும், இந்த ஆண்டு அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிந்துள்ளது. அவர்களுக்கு இந்த சிங்கள- தமிழ் புத்தாண்டு முதல் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும். மேலும் ‘அஸ்வெசும’ திட்டத்தின் கீழ் சமுர்தியை விட மூன்று மடங்கு நன்மைகள் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் 24 லட்சம் பேருக்கு அந்த நன்மைகள் கிடைக்கும்.

இந்த சிங்கள – தமிழ் புத்தாண்டில் அந்த அனைத்து குடும்பங்களுக்கும் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மேலும், காணி அனுமதிப் பத்திரம் உள்ள அனைவருக்கும் நிரந்தர காணி உரித்து வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொழும்பில் 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு சட்டபூர்வ உரிமைகள் வழங்கப்படும். இக்கட்டான காலங்கள் இருந்தபோதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கி, புரட்சியை உருவாக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம். மேலும், விவசாய நவீனமயமயப்படுத்தி, 10 ஆண்டுகளில் ஏற்றுமதி மூலம் வருமானம் ஈட்ட எதிர்பார்க்கிறோம்.

மேலும் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவை உருவாக்கியுள்ளோம். அதன் பணிகளில் நான் தலையிடவில்லை. தவறு செய்வர்களுக்கு எதிராக வழக்கு தொடர முடியும். அது எனக்கு பிரச்சினையும் இல்லை.

மேலும் நாடாளுமன்ற குழுக்கள் நியமிக்கப்பட்டன. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டமூலம் மற்றும் பாலின சமத்துவ சட்டமூலம் ஆகியவற்றை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த தற்போதைய சட்டங்களைத் திருத்தவும் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தனிப் பிரிவு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவை நாட்டின் சாதாரண மக்களின் வளர்ச்சிக்காக செய்யப்பட்டவை.

நான் ஜனாதிபதிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் எனக்கு ஆதரவளித்த ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கட்சி பேதமின்றி எனக்கு ஆதரவளித்த பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களிடம் குறுகிய அரசியல் நோக்கமில்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்ப நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

2020 நாடாளுமன்றத் தேர்தலின் போது நாங்கள் பிளவுபட்டோம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி என்ற ரீதியில் உண்மையைச் சொல்லி முன்னோக்கிச் செல்வோம் என அன்று நான் கூறினேன். திட்டமிட்டு செயற்பட்டால் குறுகிய காலத்தில் ஆட்சிக்கு வர முடியும் என சுட்டிக்காட்டினேன். ஆனால் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தலில் வெற்றி பெற, பொய்யான வாக்குறுதிகளை அளிக்க வேண்டும் என்று சிலர் நினைத்தனர்.

இந்தக் கருத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்டது. சிலர் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர். சிலர் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். சிலர் எங்களுக்கு வாக்களித்தனர். இன்று ஒரே ஒரு கட்சிதான் இருக்கிறது. அதுதான் ஐக்கிய தேசியக் கட்சி. டி.எஸ். சேனாநாயக்க சுதந்திரம் பெற்றுக் கொடுத்த நாட்டை பாதுகாப்பதற்கும் ஜே.ஆர். ஜெயவர்தன உருவாக்கிய பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காகவும் நாம் முன்வந்துள்ளோம். அதற்காகத் தான் உங்கள் ஆதரவைக் கோருகிறேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்