சதி ஊடாக ஆட்சிக்கு வந்தார்; முட்டாள்தனத்தால் பதவியிழந்தார்: கோட்டா குறித்து சம்பிக்க தெரிவிப்பு

🕔 March 9, 2024

கோட்டாபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், அவரின் முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் பேசும்போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார படுகொலையாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே கடந்த காலம் பற்றி புத்தகம் எழுதுவது பயனற்றது. ராஜபக்ஷகளின் வியாக்கியானத்தை நாட்டு மக்கள் கவனத்தில்கொள்வதில்லை.

தேசிய மற்றும் சர்வதேசத்தின் சதியினால்தான் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றதாக கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிடுவது நகைப்புக்குரியது.

கோட்டாபயவை பதவியில் இருந்து வெளியேற்ற எவரும் சதி செய்யவில்லை. ஏனெனில் சதி ஊடாகவே அவர் பதவிக்கு வந்தார். கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தினால் பாரிய விளைவுகள் ஏற்பட்டன.

எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, மின் விநியோக துண்டிப்பு ஆகிய நெருக்கடிகளை ஏற்படுத்திய கோட்டாபய ராஜபக்ஷ – மக்களால் வெளியேற்றப்பட்டார் என்பதே உண்மை.

கோவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுவதை ஏற்க முடியாது.

ஏனெனில், கோவிட் பெருந்தொற்று இலங்கைக்கு மாத்திரம் தாக்கம் செலுத்தவில்லை. இலங்கையை விட பொருளாதார பின்னடைவில் இருந்த நாடுகள் கோவிட் தாக்கத்தை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்தன.

கோவிட் பெருந்தொற்று இரண்டாம் அலையை கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே தோற்றுவித்தது.

கோவிட் தடுப்பூசிகள் கொள்வனவு தாமதப்படுத்தப்பட்டு தம்மிக்க பாணிக்கு முன்னுரிமை வழங்கியமை, கோவிட் மரணங்களின் உண்மையான எண்ணிக்கையை மூடி மறைத்தமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க கோட்டாபய ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷகள் முயற்சிக்கின்றார்கள்.

கோட்டாபய ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷகள் பொருளாதார படுகொலையாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆகவே கடந்த காலம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ புத்தகம் எழுதுவது பயனற்றது” என்றும் தெரிவித்துள்ளார்.

‘சதி’ எனும் தலைப்பில் கோட்டாபய ராஜபக்ஷ எழுதியுள்ள புத்தகத்தில், அவர் பதவியிழப்பதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச சதிகளே காரணம் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: தன்னால் தீர்க்க முடியாமல் போன 03 விடயங்கள் குறித்து தன்னுடைய புத்தகத்தில் கோட்டா விபரிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்