சவூதியிடமிருந்து இலங்கைக்கு 50 டொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு
இலங்கைக்கு சவூதி அரேபியாவின் கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் – இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரிடமிருந்து 50 டொன் பேரிச்சம்பழங்கள் அன்பளிப்பாக கிடைத்துள்ளன.
முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் தலைமையகத்தில்நேற்று (06) நடைபெற்ற வைபவத்தின் போது, சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி, இலங்கை அதிகாரிகளிடம் இந்த பேரிச்சம்பழங்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன மற்றும் அமைச்சின் கீழ் உள்ள முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சைன் அல்-ஆபிதீன் பைசல் ஆகியோர் முன்னிலையில் இந்த பழங்கள் கையளிக்கப்பட்டன.
சவூதி அரேபியாவின் கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அமீர் அஜ்வாத் மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் பல அதிகாரிகள், அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் தூதரக அதிகாரிகளும் இதன்போது சமூகமளித்திருந்தனர்.