முஷாரப்பின் கருத்து மலிவானவை; திம்புலாகல பிரதேச செயலாளர் தெரிவிப்பு: விவாதத்துக்கு வருமாறும்அழைப்பு
இலங்கை நிர்வாக சேவையிலுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் சிரேஷ்ட அதிகாரிகள் – கிழக்கு மாகாண சபையிலுள்ள முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட தகுதியற்றவர்கள் என்றும், அவர்களுக்கு சிங்களம் மற்றும ஆங்கிலம் போன்ற பாசைகள் தெரியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்தமையானது மிகவும் மலினமான கருத்து என்று, திம்புலாகல பிரதேச செயலாளர் ஏ.எல். அமீன் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினரை – மேற்படி விடயம் தொடர்பில் விவாதிக்க வருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதேச செயலாளர் ஏ.எல். அமீன் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில்;
‘கௌரவ. பா.உ முசாரப் அவர்கள், அரச உயர் பதவிகளில் முஸ்லிம்களின் இயலுமை தொடர்பாக ஊடக அறிக்கையில் வெளியிட்ட கருத்துக்களில் பெருமளவானவை தர்க்கரீதியாக, பிரயோக ரீதியாக மிகவும் மலினமானவை.
அவர் நேரலை விவாதமொன்றுக்கு இந்த விடயத்தில் தயார் என்றால், அவரை எதிர்கொண்டு தெளிவுபடுத்த நான் தயார்’ என – அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலாளர் ஏ.எல். அமீன் – ஏறாவூர் பிரததேசத்தை சொந்த இடமாகக் கொண்டவராவார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள 07 முக்கிய அரச பதவிகளில் எந்தவொரு பதவிக்கும், இலங்கை நிர்வாக சேவையில் சிரேஷ்டத்துவத்தைக் கொண்ட முஸ்லிம் அதிகாரிகள் எவரையும் – ஆளுநர் செந்தில் தொண்டமான் நியமிக்காமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப்பின் கருத்து என்ன என்று, நேற்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், குறித்த பதவிகளைப் பெறத் தகுதியுடையவர்கள் எனக் கூறப்படும் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு – சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாசைகள் தெரியாது என்றும், அதனால் அவர்கள் அந்தப் பதவிகளுக்கு தகுதியற்றவர்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
தொடர்பான செய்தி: கிழக்கு மாகாண முஸ்லிம் நிர்வாக அதிகாரிகளை கொச்சைப்படுத்தி பேசிய முஷாரப் எம்.பிக்கு, மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அமீர் கண்டனம்