உரிமையாளர் இல்லாத மல்வானை வீடு: அடுத்த நடவடிக்கை குறித்து நீதியமைச்சர் தகவல்

🕔 February 22, 2024

ர்ச்சைக்குரிய மல்வானை வீடு மற்றும் அதனைச் சூழவுள்ள 15 ஏக்கர் காணி ஆகியவற்றுக்கு உரிமையாளர் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அதனை அரசு அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்த தீர்மானமானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ எனும் மக்கள் போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட மேற்படி சொகுசு வீட்டை நீதி அமைச்சர் நேற்று (21) பார்வையிட்டார்.

இதன்போது ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ; இந்த சொத்துக்களுக்கு உரித்தானவர்கள் யாரும் இல்லாமையால், இது அரச சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், சொத்து தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவையுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ – சர்ச்சைக்குரிய மல்வானை வீடு மற்றும் காணியின் உரிமையாளராக கருதப்பட்டார்.

தொம்பே – மல்வானையில் காணி ஒன்றை கொள்வனவு செய்வதற்கும் ஆடம்பர வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கும் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

ஆயினும் அந்தச் சொத்துக்களுடன் தனக்குத் தொடர்புகள் இல்லை என அவர் மறுத்ததையடுத்து, இந்த வழக்கை விசாரித்து வந்த கம்பஹா மேல் நீதிமன்றம், சொத்து உரிமையாளர் இல்லாததால், அது அரசின் சொத்தாக அறிவிக்கப்படும் என தீர்ப்பளித்தது.

ஜூன் 2022 இல், மல்வானை காணி மற்றும் சொகுசு வீடு தொடர்பான வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்