அரபி மொழியிலும் தேசிய கீதத்தினைப் பாட வேண்டுமென்று கேட்பார்கள்; மஹிந்த
அரபி மொழியிலும் இலங்கையின் தேசிய கீதத்தினைப் பாட வேண்டும் என்று எதிர்காலத்தில் கேட்பார்கள் என்பதில் சந்தேகமில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சந்தோசப்படுத்துவதற்காகவே, தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படவுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி தொடர்பில், ஊடகவியலாளர்கள் மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று செவ்வாய்கிழமை வினவியபோதே மேற்கண்ட விடயங்களை கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்;
“கோடிக் கணக்கான தமிழர்கள் வாழும் இந்தியாவின் தமிழ் நாட்டிலும், அந்நாட்டின் ஏனைய பிராந்தியங்களிலும் ஒரே மொழியில்தான் தேசிய கீதம் பாடப்படுகிறது.
தமிழகத்தில் இந்தியாவின் தேசிய கீதம் தமிழில் பாடப்படுமானால், இலங்கையிலும் தேசிய கீதத்தினை தமிழில் பாடலாம்.
ஆங்கிலத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சிங்களத்தையோ, தமிழையோ சரியாக உச்சரிக்க வராது. அவர்கள் ஆங்கிலத்தில்தான் நாங்கள் தேசிய கீதத்தைப் பாடுவோம் என்று கோரிக்கை விடுத்தால் என்ன செய்வது.
எதிர்காலத்தில், அரபி மொழியிலும் இலங்கையின் தேசிய கீதத்தினைப் பாட வேண்டும் என்று கேட்பார்கள் என்பதில் சந்தேகமில்லை” என்றார்