பொதுமன்னிப்பு ரத்துச் செய்யப்பட்ட துமிந்த சில்வா, வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தகவல்

🕔 January 18, 2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்பொழுது கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைக்கு அமைய – துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து சிறையிலடைக்கப்பட் அவருக்கு – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.

எனினும், பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை சட்டரீதியானதல்ல என, உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் – ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் துமிந்த சில்வா சிகிச்சை பெற்று வருகின்றார்.

துமிந்தவின் உடல் நிலை குறித்து மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையை கோர உள்ளதாகவும், அவர்கள் பரிந்துரைத்தால் துமிந்த சில்வா – சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

தொடர்பான செய்தி: துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்கான காரணத்தை, நீதிமன்றுக்கு தெரித்தார் கோட்டா

Comments

புதிது பேஸ்புக் பக்கம்