வெள்ளத்தில் மூழ்கியது தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பொருட்கள், ஆவணங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன

🕔 January 11, 2024

– எம்.என்.எம். அப்ராஸ் – 

தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினாலும் குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினாலும் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகமும் நீரில் மூழ்கியுள்ளது.

பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒலுவில் வளாக மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, நேற்று மாணவர்கள் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து வெள்ள அபாயத்தால் பாதிக்கப்படும் என சந்தேகிக்கப்பட்ட இடங்களில் இருந்த அனைத்து பொருட்களும் – பல்கலைக்கழக அனர்த்த முகாமைத்துவ குழுவின் கண்காணிப்பில், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டன. 

இதேவேளை மேலதிக வெள்ள அபாயம் ஏற்படலாம் என எதிர்பார்க்கும் இடங்களில் உள்ள ஆவணங்களையும் பல்கலைக்கழக சொத்துக்களையும் பாதுகாக்கும் பொருட்டு, அவற்றினை அகற்றும் நடவடிக்கைகளில் பல்கலைக்கழக ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை பல்கலைக்கழக ஊழியர்களுடன் இணைந்து முப்படையினரும் களப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்