மதங்கள், கலாசாரங்களை நிந்திப்பது இஸ்லாத்துக்கு முரணானது: பரத நாட்டியம் பற்றிய ஹமீட் மௌலவியின் கருத்துக்கு ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

🕔 November 22, 2023

– அஷ்ரப் ஏ சமத் –

பரத நாட்டியம் குறித்து அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹமீட் தெரிவித்த அநாகரீகமான கருத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம் தெரிவித்துள்ளது.

மதம் மற்றும் கலாசாரங்கள் நிந்திக்கப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானது என்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குறிப்பிட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இன்று (22) நடத்திய ஊடக சந்திப்பில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் மௌலவி அர்க்கம், உதவிச் செயலாளர் மௌலவி தாசீம் ஆகியோர் கலந்து கொண்டு இந்த ஊடக சந்திப்பை நடத்தினர்.

இந்த ஊடக சந்திப்புக்கு இந்துக் சமயத் தலைவர்களான வைத்தியேஸ்வரா குருக்கள்,  சிவராம் கிருஸ்ன குருக்கள், சிவசிறி, தர்கா சர்மா குருக்கள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களும் அங்கு கருத்துத் தெரிவித்தனர்.

மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் நிந்திக்கப்படுவதை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கண்டிப்பதோடு, பரத நாட்டியம் தொடர்பில் மேற்படி மௌலவி தெரிவித்த கருத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினையை இந்து குருக்களுடன் கலந்துரையாடி – சமரச நிலைக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

அகில இலங்கை ஜமமியத்துல் உலமா செயலாளர் மௌலவி அர்ககம் அங்கு பேசுகையில்;

“கடந்த 09ஆம் திகதி முஸ்லிம் மதப்போதகர் ஒருவரினால் பரத நாட்டியம் தொடா்பாக வெளியிடப்பட்ட காணொளியையும் பின்னர் அது தொடர்பில் தான் மன்னிப்பு கேட்பதாக வெளியிட்ட காணொளியையும சமூக வலைத்தளங்களில் காணக்கிடைத்தது. குறித்த மதபோதகரினால் தெரிவிக்கப்பட்ட கருத்து இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளதை அவதானிக்கின்றோம். 

இவ்வாறு மதம் மற்றும் கலாச்சார விழுமியங்கள் நிந்திக்கப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானதும் கண்டனத்துக்குரியதுமாகும்.  

‘நபியே உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக’ என்றுதான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது” என்று கூறியதோடு, ஒவ்வொருவரும் அழகிய போதனைகளை தமது வாழ்வில் கடைப்பிடிக்குமாறும்  வேண்டிக் கொண்டார்.

இதேவேளை, இவ்விடயத்தில் இரண்டு மதங்களின் தலைவர்களும் பேசி, பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக, ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இந்து மதத் தலைவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், மேற்படி விடயத்தில் குறித்த மௌலவி மண்னிப்பு கேட்டு – அவர் தனது தவறை ஏற்றுக் கொண்டமையினை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும், மதங்கள் மற்றும் கலாசார விடயங்களில் ஐக்கியமானதொரு நிலைப்பாட்டுக்கு தாங்கள் வந்துள்ளதாகவும் இந்து சமயத் தலைவர்கள் தெரிவித்தனர்.

தொடர்பான செய்தி: பரத நாட்டியத்தை இழிவுபடுத்திப் பேசிய மௌலவிக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் புகார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்