வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக 08 கோடி ரூபாவை இழந்தவர்கள்: சாணக்கியன் எம்.பியை சந்தித்து, நீதி பெற்றுத் தருமாறு கோரிக்கை
– பாறுக் ஷிஹான் –
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறையிட்டுள்ளனர்.
08 கோடி ரூபாவினை – போலி முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி இழந்துள்ளதாகவும் தற்போது நிர்க்கதிக்குள்ளான தமக்கு நீதியைப் பெற்றுத் தருமாறு கோரியும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் பாதிக்கப்பட்டோர் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை ( 23) மாலை மட்டக்களப்பு மாவட்டம் – களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்துக்கு பணத்தை இழந்தவர்கள் வருகை தந்து, பல மணித்தியாலங்கள் நாடாளுமன்ற உறுப்பினருடன் தத்தமது பிரச்சினைகளை தெரிவித்தனர்.
இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் தெரிவிக்கையில்;
“வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி 185 பேரிடம் 08 கோடிகளுக்கும் அதிகமாக மோசடி செய்யப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தில் உள்ள சிலரே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு உடந்தையாக பாடசாலை மாணவன் ஒருவரும் இருந்துள்ளதாக அறிய முடிகிறது. தற்போது இவ்விடயம் தொடர்பில் 03 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.
இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். பாதிக்கப்பட்ட மக்கள் என்னைச் சந்தித்து, இதற்கு உரிய நீதியினை பெற்றுத் தரும்படி கேட்டுள்ளாரகள்.
தற்பொழுது இவ்வாறான மோசடிகள் அதிகளவாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்றார்.