“அமைச்சரவை மாற்றம் தவறான தீர்மானம்”: ரணிலுடன் மோதுவதற்கு தயாகிறது மொட்டு

🕔 October 23, 2023

மைச்சரவையில் இன்று மேற்கொள்ளப்பட்ட மாற்றம் தொடர்பில், குறிப்பாக கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் கட்சி) அதிருப்தி வெளியிட்டுள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன், அவருக்குப் பதிலாக டொக்டர் ரமேஷ் பத்திரன சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அமைச்சுப் பதவிகளை மாற்றியமை – குறிப்பாக கெஹலிய ரம்புக்வெல்லவை மாற்றியமை ‘தவறான தீர்மானம்’ என்றார்.

“அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என நிரூபிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே சிறந்தது என ஜனாதிபதி கருதியிருக்கலாம்” என அவர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இருந்தபோதிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரை – சுகாதார அமைச்சராக நியமித்தமை தொடர்பில் பொதுஜனபெரமுன தனது ஏமாற்றத்தை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் சாகல காரியவசம் கூறினார்.

“பெரும்பான்மையான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் ஆதரவின் மூலமே ஜனாதிபதியால் அரசாங்கத்தை அமைக்க முடிந்துள்ளது. இந்த நிலையில், இவ்வாறான நியமனம் வழங்கப்பட்டுள்ளமை வருத்தமளிக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து உறுப்பினர்களே இதுவரை ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்”.

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நீக்கிவிட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அமைச்சரவை மாற்றததில் சந்தர்ப்பம் வழங்கியமை ஜனாதிபதியின் தவறான முடிவு” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ‘தவறான தீர்மானங்கள்’ தொடர்பில் கூறுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அச்சமில்லை எனக் கூறிய சாகல காரியவசம், அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி எடுத்த தீர்மானங்கள் தொடர்பில் – தமது கட்சி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்