கடமையின் போது கடத்தப்பட்ட போக்குவரத்துச் சபை சாரதி தப்பினார்: நடந்தவை குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம்?
கம்பளை பகுதியில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் சாரதி – சந்தேகநபர்களிடம் இருந்து தப்பிய நிலையில், கம்பளை பொலிஸ் நிலையம் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த பொலிஸார், அவரை கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மாவெல பகுதியிலிருந்து கண்டி நோக்கி சென்ற பஸ்ஸை ஓட்டிச் சென்ற மேற்படி சாரதி, வேன் ஒன்றில் வந்தவர்களால் மறிக்கப்பட்டு நேற்று (24) – கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், குறித்த வேனில் இருந்தவர்கள் தம்மிடம் வாள் ஒன்று தொடர்பாக விசாரித்ததாக, கடத்தப்பட்டவர்களிடம் இருந்து தப்பிய சாரதி பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
கடத்தப்பட்டவர் கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் வேனில் இருந்து தப்பி நேற்றிரவு கம்பளை பொலிஸ் நிலையத்துக்கு வந்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கம்பளை பேருந்துசாலையில் பணியாற்றும் கொத்மலை கடதொர பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொடர்பான செய்தி: பயணித்த பஸ்ஸை நிறுத்தி, இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி கடத்தப்பட்டார்