பங்களாதேஷின் கடன்: வட்டியுடன் செலுத்தி முடித்தது இலங்கை

🕔 September 23, 2023

ங்களாதேஷிடம் இருந்து இலங்கை கடனாகப் பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வட்டியுடன் செலுத்தியுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று உடன்படிக்கையின் மூலம் இந்தக் கடனை இலங்கை பெற்றிருந்தது.

அந்த வகையில் கடந்த தவணைக் கொடுப்பனவாக வியாழன் இரவு சுமார் 50 மில்லியன் டொலர்களையும் கடனுக்கான வட்டியாக 4.5 மில்லியன் டொலர்களையும் இலங்கை செலுத்தியதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு வருட காலத்திற்கு இந்த கடனை இலங்கை பெற்றிருந்தது. எனினும் மோசமான உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி காரணமாக கடனை திருப்பிச் செலுத்தத் தவறியது. அதனையடுத்து இலங்கை அரசு தன்னை திவாலானதாக அறிவித்தது. அதனால் குறித்த கடனை அடைப்பதற்காக இலங்கை கால நீடிப்பை பங்களாதேஷிடம் பெற்றது.

ஆயினும் இந்த ஆண்டு, இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியதையடுத்து, கடனை திருப்பிச் செலுத்த முடிந்தது.

பங்களாதேஷிடமிருந்து பெற்றுக் கொண்ட கடனில் முதல் தொகையில் 50 மில்லியன் டொலர்களை கடந்த ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இலங்கை திருப்பிச் செலுத்தியது. பின்னர் ஓகஸ்ட் 31 அன்று, 100 மில்லியன் டொலர்களை திருப்பிச் செலுத்தியது. இறுதியாக கடந்த வியாழக்கிழமை இரவு மீதமுள்ள 50 மில்லியன் டொலர்களையும் வட்டித் தொகையினையும் செலுத்தியது.

பங்களாதேஷிடம் இருந்து பெற்ற கடனை மூன்று தவணைகளாக இலங்கை செலுத்தியுள்ளது.

தொடர்பான செய்தி: முதல் தவணைக் கடனை பங்களாதேஷுக்கு இலங்கை செலுத்தியது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்