கிழக்கு ஆளுநர் செந்திலுக்கு எதிராக, ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்: பிக்குகள் களத்தில்

🕔 September 19, 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும்  போராட்டத்தை கிழக்கின் பௌத்த பிக்குகள் ஆரம்பித்துள்ளனர்.

அந்த வகையில் திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக இன்று (19) காலைமுதல் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை தொடங்கியது.

திருகோணமலை – நிலாவெளி பகுதியிலுள்ள பெரியகுளம் பொரலுகந்த ரஜமகா விகாரையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிப்பதை தவிர்க்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அண்மையில் உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார்.

இது தொடர்பில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சீலவங்கதிஸ்ஸ தேரருக்கு, பிரதேச செயலாளர் ஊடாக செந்தில் தொண்டமான் அறிவித்திருந்தார்.

இதன் காரணமாக கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஏ – 6 பிரதான வீதியை வழிமறித்து பௌத்த பிக்குகளும் சிங்கள மக்களும் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக  கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக இன்றையதினம் (10) ஒரு லட்சம் கையெழுத்துக்களை திரட்டும் போராட்டத்தை பௌத்த பிக்குகள் ஆரம்பித்துள்ளனர்.

மறுபுறமாக, குறித்த பகுதியில் விகாரையொன்றை நிரமாணிப்பதற்கு 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 09ம் திகதி புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது.

எனினும், குறித்த பகுதியானது 99.9 வீதம் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட பகுதி என ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்