சேனல் 4 ஆவணப்பட தாக்கம்: ஈஸ்டர் தாக்குதல் குறித்து நாடாளுமன்ற விவாதம் நடத்த தீர்மானம்
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், இரண்டு தினங்களுக்கு சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (08) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய, எதிர்வரும் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறவுள்ளது.
சேனல் 4 அண்மையில் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான மற்றும் அதன் பின்னணி குறித்த தகவல்களை வெளிப்படுத்தியிருந்தது.
இது தற்போது, அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், எதிர்கட்சி உறுப்பினர்கள் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில், விவாதத்தை நடத்துவதற்கான காலத்தினை ஒதுக்குமாறு சபாநாயகரிடம் கோரியிருந்தனர்.
இந்தநிலையில், இன்று சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தில், இரண்டு தினங்களுக்கு விவாதத்தை நடத்துவதற்கு இணக்கம் ஏற்பட்டிருந்தது.