நிந்தவூர் பாடசாலையொன்றில் மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு முயன்ற ஆசிரியர் தலைமறைவு: சம்பவத்தை மறைக்க நிர்வாகம் முயற்சி

🕔 August 3, 2023

– பாறுக் ஷிஹான் –

பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார்.

அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி உடற்கல்வி ஆசிரியரால் விளையாட்டு அறையில் வைத்து பாலியல் ரீதியாக மாணவன் துஸ்பிரியோக முயற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிபரிடம் முறையிடப்பட்டிருந்தது.

சம்பவம் இடம்பெற்று மறுநாள், அதிபரிடம் குறித்த மாணவன் முறையிட்டுள்ளதுடன் இதுவரை இரு வாரங்கள் கழிந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல், சம்பவத்தை மூடி மறைப்பதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இச் சம்பவம் குறித்து நிந்தவூர் பொலிஸார் – குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தனது மகனான தரம் 9 இல் கல்வி கற்கின்ற மாணவனிடம் வாக்குமூலம் ஒன்றை இரு தடவை பெற்று சென்றதாக அவரின் தாயார் கூறினார்.

ஆனால் மாணவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சி செய்ததாக கூறப்படும் சந்தேக நபரான ஆசிரியர் தொடர்ந்தும் தலைமறைவாகி உள்ளார்.

இந்நிலையில் பாலியல் துஷ்பிரயோக முயற்சிக்கு உட்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் மாணவன் புதன்கிழமை (2) மாலை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுச்சென்றுள்ளதாகவும் மாணவனின் தாயார் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் எந்த தரப்பினரும் எமக்கு உதவவில்லை என்றும், கண்ணீர் மல்க அந்த மாணவனின் தாயார் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்