புதிய பொலிஸ் மா அதிபர் யார்: அரசியலமைப்பு சபையில் மூன்று பெயர்களை ஜனாதிபதி சமர்ப்பிக்கவுள்ளார்
புதிய பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு சபையில் மூன்று பெயர்களை சமர்ப்பிக்கவுள்ளார் என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக்காலம் இரண்டு தடவை நீடிக்கப்பட்ட பின்னர், கடந்த திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது.
தற்போதைய சிரேஷ்டத்துவ பட்டியலில் – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (நிர்வாகம்) நிலந்த ஜயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (வடமேல் மாகாணம்) எல்.எஸ். பதிநாயக்க, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (குற்றம்) பிரியந்த வீரசூரிய மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் (சப்ரகமுவ) பி.பி.எஸ்.எம். தர்மரத்ன ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் மூன்று பெயர்களை அரசியலமைப்பு பேரவையில் ஜனாதிபதி சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய பொலிஸ் மா அதிபரை பெயரிடுவதில் ஒரு வார கால தாமதமாகியுள்ளது. இதனால்,குற்றம் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவுகளை வழங்குவது உள்ளிட்ட நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.