ஜும்ஆ தொழுகை நேரத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வு: சமய கடமைகளுக்கு இடையூறு ஏற்படாமல் வைபவங்களை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை

🕔 June 20, 2023

– எம்.ஜே.எம். சஜீத் –

கிழக்கு மாகாணத்தில் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகள் சமயக் கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு, மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்குகோரிக்கை விடுத்துள்ளார்.

ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ள அவர்; வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நேரத்தில், ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டமையினையும், அதில் ஆளுநர் கலந்து கொண்டமையினையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில்;

‘நாட்டின் ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடுகையில் கிழக்கு மாகாணத்தில் அதிக முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். இந்நிலையில் கிழக்கு மாகாணத்தினால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகளை முஸ்லிம்களின் சமயக் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத  வகையில் ஒழுங்கு செய்வது குறித்து கவனம் செலுத்துமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த 2023.06.16 ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் வைபவத்தில் தாங்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நியமனக் கடிதம் வழங்கி வைத்துள்ளீர்கள். இது குறித்து நான் மிகவும் சந்தோசமடைகின்றேன்.

எனினும், அன்றைய தினம் வெள்ளிக்கிழமை நாளாகும். முஸ்லிம்கள் ஜூம்ஆத் தொழுகைக்கு செல்ல வேண்டிய நாள். அந்த வைபவத்தை ஒழுங்கு செய்தவர்கள் இதனைக் கவனத்தில் கொள்ளாது அந்த நிகழ்வை நீட்டிச் சென்றதால், அதில் கலந்து கொண்ட முஸ்லிம் அதிகாரிகள், நியமனம் பெற்ற ஆசிரியர்கள், அவர்களது பெற்றோர் எனப் பலரும் ஜூம்ஆவுக்குச் செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது.  

இதனை பலரும் மிகவும் கவலையேடு எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். 

எனவே, கிழக்கு மாகாணத்தில் எதிர்காலங்களில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகள் எந்தவொரு சமய கடமைகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில்  இருப்பதை உறுதி செய்து கொள்ள தேவையான அறிவுறுத்தல்களை – அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்