நாட்டில் இவ்வருடம் 225 கொலைகள் பதிவு: 20 மரணம், துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டவை

🕔 June 20, 2023

லங்கையில் மொத்தம் 34 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில்பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாதம் முதல் இன்று வரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் மொத்தம் 60 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார், இதில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் தொடர்பு மற்றும் பிற காரணங்களும் உள்ளடங்கும்.

2022ஆம் ஆண்டு பதிவாகிய 559 கொலைகளில் 493 சம்பவங்களுக்கு தீர்வு காணவும், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்யவும் பொலிஸாரால் முடிந்ததாக அவர் நேற்று (19) ஊடகங்களுக்கு கூறினார்.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 225 கொலைகள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 34 கொலைகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவை என்றும், சில தனிப்பட்ட தகராறுகள் மற்றும் திருமணத்துக்குப் புறம்பான உறவுகளுடன் தொடர்புடையவை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

2023ஆம் ஆண்டில் இதுவரை பதிவாகிய 225 கொலைகளில் 223 சம்பவங்கள் தொடர்பில் தீர்வுகண்டு சந்தேகநபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை பொலிஸார் கைது செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

2023 இல் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் கடந்த வருடத்தை விட குறைவாகவே காணப்படுவதகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்