பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்குவதற்கான தீர்மானம், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான தீர்மானம், ஏப்ரல் இறுதி வாரத்தில் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஜனக ரத்நாயக்கவுக்கு நிதியமைச்சு இரண்டு பக்க குற்றப்பத்திரிகையை அனுப்பியது.
பதிலுக்கு 25 பக்கங்கள் கொண்ட பதிலை வழங்கியதாக தான் அனுப்பி வைத்ததாக ஜனக ரத்நாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அவர் அளித்த பதில்கள் குறித்து முடிவெடுப்பது நிதியமைச்சின் பொறுப்பாகும்.
எனினும் அவருக்கு எதிராக சபையில் சமர்ப்பிக்கப்படும் தீர்மானம் குறைந்தது 113 உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும்.
இதேவேளை, டொலரின் பெறுமதி வீழ்ச்சி, எரிபொருள் விலை வீழ்ச்சி உள்ளிட்ட பல காரணங்களால் – மின்சார உற்பத்திச் செலவு குறைந்துள்ளதாகவும், எனவே, மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க வேண்டும் என்றும் ஜனக ரத்நாயக்க நேற்று (4) தெரிவித்திருந்தார்.