கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர் அமர்வில், தமிழகத்தின் 125 தொழில்துறையாளர்களுடன், உலகெங்கிலும் உள்ள 400 தொழில்துறை பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
இந்த அமர்வு, எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
தமிழகத்தில் இருந்து 125 பேரும், பெங்களூரில் இருந்து 20 பேரும், டெல்ஹி மற்றும் மகாராஸ்டா ஆகிய இடங்களில் இருந்து 30பேரும் இந்த அமர்வில் பங்கேற்கவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர்மேலும் கூறினார்.
இதேவேளை பூனேயின் கோழி உற்பத்தி நிறுவனமான வெங்கீஸ், திருகோணமலை உப்புவெளியில் முதலீடு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏனைய இந்திய நிறுவனங்களை பொறுத்தவரையில் அவை, சூரிய சக்தி உபகரணங்கள் மற்றும் மருந்தக முதலீடுகளில் அக்கறை செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், கிழக்கில் தொழிலற்றுள்ள இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்கி தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில், 1.7 மில்லியன் மக்களில் இரண்டு லட்சம் பேர் வேலையற்ற நிலையில் உள்ளனர்.
இதன்காரணமாக 50ஆயிரம் பேர் மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்களை தேடி சென்றுள்ளனர் என்றும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.



