புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார்;உரிய நேரத்தில் வெளிவருவார் : பழ. நெடுமாறன் அறிக்கை

🕔 February 13, 2023

மிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், உரிய நேரத்தில் அவர் வெளிவருவார் என்றும் இந்தியாவின் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் இந்திய ஊடகங்களுக்கு இன்று தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள சிங்கள மக்களின் போராட்டமானது பிரபாகரன் வெளிவருவதற்கான உகந்த சூழலை உருவாக்கியுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

“தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை அவர் அறிவிக்கவுள்ளார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவை வழங்க முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனவும் நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில், பழ. நெடுமாறனின் கையெழுத்துடன் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

பிரபாகரன் குடும்பத்தினருடன் தனக்கு தொடர்புகள் உள்ளதாகவும், அவர்களின் அனுமதியுடனேயே, பிரபாகரன் உயிருடன் உள்ள செய்தியியை வெளியிடுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழக அரசும், தமிழ் நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று, பிரபாகரனுக்கு துணை நிற்குமாறும் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொய்க்கு பலியாக வேண்டாம்

இது இவ்வாறிருக்க, பிரபாகரன் உயிருடன் உள்ளதாக பரப்பப்படும் பொய்யான தகவலுக்கு பொதுமக்கள் பலியாக வேண்டாம் என இந்திய ஊடகவியலாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பொய்யான அறிக்கைகளை வெளியிடுவது, இலங்கைலுள்ள பல்வேறு சமூகங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தும் எனவும் ராதாகிருஷ்ணன் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்