மின் வெட்டு விவகாரம்: நீதி மன்றங்களில் மனுத்தாக்கல்; விடாப் பிடியில் மின்சார சபை

🕔 February 2, 2023

திர்வரும் 17 ஆம் திகதி உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை, திட்டமிடப்பட்டுள்ள மின் தடைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, 3 லட்சத்து 31 ஆயிரம் பரீட்சார்த்திகளின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த காலப் பகுதியில் அமுலாக்கப்படும் எந்தவொரு மின்தடையும், அனுமதியற்றதும் சட்டவிரோதமானதுமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்றைய தினம், 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதனிடையே, உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலத்தில், மின்சாரம் துண்டிக்கப்படுவதை தடுப்பதற்காக, இலங்கை மின்சார சபைக்கு எதிராக தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, மேன்மறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதேநேரம், பரீட்சை நடைபெறு காலத்தில், மின் துண்டிப்பை தவிர்க்கும் உத்தரவை, இலங்கை மின்சார சபை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பிறப்பிக்குமாறு கோரி, இலங்கை ஆசிரியர் சங்கம் உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அந்தச் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்