ஊழல்: உலகளவில் சோமாலியா முதலிடம்; இலங்கையின் இடம் குறித்தும் தகவல்
இலங்கை 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டு அதிக ஊழல் நிறைந்த நாடாக பதிவாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஊழல் புலனாய்வு சுட்டெண் (CPI) தரவுகளை மேற்கோள்காட்டி ‘ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு, இலங்கையின் தரவரிசை ஒரு புள்ளியால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊழல் புலனாய்வு சுட்டெண்ணுக்கமைய, 180 நாடுகளில் 36 புள்ளிகளுடன் இலங்கை 101 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
புள்ளிவிபரவியல் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது.
ஊழல் புலனாய்வு சுட்டெண் தரப்படுத்தலுக்கு 0 முதல் 100 வரையிலான புள்ளி அளவைப் பயன்படுத்துகிறது.
அதற்கமைய, 100 புள்ளி என்பது ஊழல் அற்ற நாடாகவும், 0 புள்ளி மிகவும் ஊழல் நிறைந்ததாகவும் கருதப்படுகிறது.
இந்த பட்டியலில், 90 புள்ளிகளுடன் டென்மார்க் முதல் இடத்தில் உள்ள அதேவேளை, 12 புள்ளிகளுடன் சோமாலியா இறுதி (180 ஆவது) இடத்தில் உள்ளது.