அரச ஊழியர்களின் சம்பளத்தை பிற்படுத்த தீர்மானம்: யாருக்கெல்லாம் தாமதமாகும்?

🕔 January 17, 2023

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை காரணமாக குறிப்பிட்ட அரச துறை ஊழியர்களின் சம்பளத்தை சில நாட்கள் தாமதப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிறைவேற்று அதிகாரம் அற்ற அரச துறை ஊழியர்களுக்கு, உரிய காலத்தில் சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இருந்தபோதிலும், நிறைவேற்று தர ஊழியர்களின் சம்பளத்தை சில நாட்களுக்கு தாமதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான தனது புதிய வருமானத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்பார்க்கப்படும் வருமானத்தைக் குவிப்பதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் வரும் வருமானத்தின் அடிப்படையில், ஜனவரி முதல் அடுத்த சில மாதங்கள் வரை அரசு தனது செலவுகளை நிர்வகிக்கும்.

இதன்படி, திறைசேரியின் திட்டங்களுக்கு அமைவாக அரசின் செலவினங்களை நிர்வகிப்பதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

எனவே, நிறைவேற்று அதிகாரம் இல்லாத அரச துறை ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படும் என்றும், நிர்வாக தர ஊழியர்களின் சம்பளம் சில நாட்கள் தாமதமாகும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Comments