புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு கிடையாது; ஜனாதிபதி தெரிவிப்பு

🕔 January 6, 2016

Mithiripa sirisena - 096சிறை வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலிப் பயங்கரவாதிகள் 215 பேரையும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது என்றும், இலங்கையில் ‘அரசியல் கைதிகள்’ என எவரும் இல்லை என்றும் ஜனாதிபதி இந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேர்காணலில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது;

“பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் காரணமாக மேற்குலக நாடுகளும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு காரணிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

போரில் என்ன இடம்பெற்றது என ஆராய்ந்து, அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் யாப்புத் திருத்தம் பற்றி இந்த மாதம் 09ம் திகதி நாடாளுமன்றில் அறிவிப்பேன்.

அரசியல் யாப்புத் திருத்தங்கள் குறித்து நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வேன். இலங்கையின் இறையாண்மை மற்றும் உரிமை ஆகியன தொடர்பில் உரிய முறையில் ஆராய்ந்து அதன் பின்னர் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினையை உறுதியளித்தவாறு ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோணப்புலம் அகதி முகாமிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில், மக்கள் அங்கு கடந்த 25 வருடங்களாக வாழ்ந்து வந்தமையைக் கண்டறிந்தேன். மக்களின் அவல நிலையை அறிந்து கொள்ளாமை குறித்து என்னை நானே நொந்து கொண்டேன்”.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்