பொதுபலசேனாவின் காட்டுமிராண்டித்தனத்துக்கு, நல்லாட்சியில் இடமளிக்கக் கூடாது; ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அமைச்சர் றிசாத் கடிதம்

🕔 December 17, 2015

Rishad - 075– அஷ்ரப் ஏ. சமத்-

புனித குர் ஆனை தடைசெய்யவேண்டும் என, பொதுபலசேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ள கருத்து, இனங்களுக்குக்கிடையே பாரிய விரிசலை ஏற்படுத்தக் கூடியதெனவும், இது தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவசர கடிதம் ஒன்றை ஐனாதிபதி மற்றும் பிரதமருக்கு அணுப்பியுள்ளார்.

அமைச்சர் எழுதியுள்ளஅந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இனவாத மதவாத அடிப்படையில், குரோத உணர்வைத்தூண்டும் இக்கருத்துக்கள் முஸ்லிம்களை புண்படுத்தியுள்ளது. உலக முஸ்லிம்கள் புனித குர்ஆனை உயிரினும் மேலாக கருதுகின்றனர்.

அவர்களின் புனித திருமறையை எவரும் கொச்சைப்படுத்தவோ இழிவு படுத்தவோ ஒருபோதும் அணுமதிக்கமாட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.


பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் ஏனைய இனங்களையும் மதங்களையும் மதித்து நடப்பவர்கள் முஸ்லிம்கள். குறிப்பாக இலங்கையில் வாழும் பொளத்த மக்களுடன்  அந்நியோன்னியமாகவும், சகோதரவாஞ்சையுடனும் வாழ்ந்துவருபவர்கள் முஸ்லிம்கள். நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு முஸ்லிம்கள் ஒருபோதும் குந்தகம் விளைவித்தவர்கள் அல்லர். தமது தாய் நாட்டுக்கு என்றுமே விசுவாசமாக உழைத்து, வாழ்ந்துவரும் முஸ்லிம்மக்கள் மீது அண்மைக்காலமாக  இனவாத சக்கிகள் சேறுபூசி வருகின்றன.

பொதுபலசேன போன்ற இனவாத இயக்கங்கள் கடந்த ஆட்சியில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருந்த அராஜகங்களை கட்டுப்படுத்த கடந்த அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உங்கள் தலைமையிலான நல்லாட்சியில் இனங்களுக்கிடையே மீண்டும் நல்ல உறவு துளிர்விட தொடங்கியுள்ளது. இந்த சுமூக நிலையை குழப்பி, இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்துவதே பொதுபலசேனாவின் நோக்கமாகும்.

பொதுபல சேனாவின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு நல்லாட்சியில் இடமளிக்ககூடாது. புனித குர்ஆன் தொடர்பில் ஏற்கனவே பொதுபல சேனா தெரிவித்திருந்த சர்ச்சையான கருத்துக்களால் நொந்துபோய்யிருந்த முஸ்லிம் சமூகம், குர்ஆனை தடை செய்ய வேண்டும் என்ற இந்த இயக்கத்தின் விஷக்கருத்துக்களால் மீண்டும் உறைந்துபோய் இருக்கின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்