சுசிலின் கட்சி அங்கத்துவத்துக்கு ஆபத்து; ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை: செயலாளர் காரியவசம்
முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அங்கத்துவம் கேள்விக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, கட்சிக்குள் கோரிக்கை விடுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் டெய்லி மிரருக்கு தெரிவித்துள்ளார்.
சுசிலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பதை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழு கூடி தீர்மானிக்கும் எனவும் காரியவசம் கூறியுள்ளார்.
“பொதுஜன பெரமுனவின் ஒரு தொகை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமஜயந்த மீது – ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் நான் சொந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. கட்சியின் மத்திய குழுவே அதனை முடிவு செய்யும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழு எப்போது கூடும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் காரியவசம் கூறினார்.
அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்சித்தார் எனும் குற்றச்சாட்டில், சுசில் – அவரின்ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
விவசாய அமைச்சர் தனது கடமைகளில் தவறிவிட்டதாக, கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் தெரிவித்திருந்தார்.
சுசில் பிரேமஜயந்தவை அவரின் பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை நீக்கியதன் பின்னர்,அவருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாடினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதன் பின்னர், பிரதமர் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக சுசில் பிரேமஜயந்த செவ்வாய்கிழமை மாலை தெரிவித்தார்.
தொடர்பான செய்தி: அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கம்: கோட்டா அதிரடி