1948இல் 118 பேருக்கு ஒருவர், இப்போது 13 பேருக்கு ஒருவர்: அரச சேவை தாங்கிக் கொள்ள முடியாதளவு விரிவடைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவிப்பு

🕔 November 13, 2021

நாடு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அரச சேவையானது விரிவடைந்துள்ளதாகவும் இதனால் தொடர்ந்தும் அரச சேவைக்கு சலுகைகளை வழங்க முடியாது எனவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திரமடையும் போது நாட்டின் பொது மக்களில் 118 பேருக்கு ஒரு அரச ஊழியர் இருந்தார். எனினும் தற்போது 13 பேருக்கு ஒரு அரச ஊழியர் இருக்கின்றார் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (12) சமர்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக  கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்  போதே அவர் இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.

“அரச சேவை நாட்டுக்கு சுமையாக மாறியுள்ளது. அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டுமாயின் அதற்காக பொதுமக்களிடம் இருந்து வரியை அறவிட வேண்டும்.

இதன் காரணமாக மேலும் ஒரு வருடத்துக்கு அரச சேவைக்கு பொது நிதியை செலவிட முடியாது.

இந்த அரச ஊழியர்களில் பலர் – காலம் கடந்து திருமணம் செய்கின்றனர். இந்த அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் காலத்திலேயே அவர்களின் பிள்ளைகள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுகின்றனர் என்பது மட்டுமல்ல, உயர்கல்வியை கற்க ஆரம்பிக்கின்றனர்.

இது அரச ஊழியர்களுக்கு பெரிய பிரச்சினை. இதன் காரணமாகவே நாங்கள் அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை மேலும் 10 ஆண்டுகள் அதிகரித்துள்ளோம்.

தற்போது அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 55 இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும்.

அத்துடன் அரச சேவைக்கு அனுபவம் கொண்ட ஊழியர்கள் அவசியம். எதிர்காலத்தில் வருடாந்தம் ஓய்வுபெறும் அரச ஊழியர்களின் சதவீதத்துக்கு அமைய புதிய தொழில் வாய்ப்புக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்